Step into an infinite world of stories
4.5
Short stories
அந்தக் காலத்தில் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணியது கிடையாது. அதேபோல ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேதை என்றும் எண்ணியது கிடையாது. 'கல்கி', கதை, கட்டுரை, அரசியல், சிரிப்பு, சரித்தம் என பல பிரிவுகளில் தன்னுடைய முத்திரையைப் பதித்தார். எஸ். வி. வி., தேவன், மகரம், நாடோடி... போன்றவர்கள் தங்கள் கதைகளுக்கிடையே நகைச்சுவையை அள்ளித் தெளித்தனர்.
இவர்களுடைய முக்கியத்துவம் கதைக்குத்தான் இருக்குமே ஒழிய, நகைச் சுவைக்கு இருக்காது. இருந்தாலும் சொல்லும் நகைச்சுவை சற்று தூக்கலாகவே இருக்கும். அதனால் வாசகர்கள் மனத்தில் இவர்களுடைய நகைச்சுவை மிக மிக ஆழமாகப் பதிந்து, இவர்களை நகைச்சுவை எழுத்தாளர்களாகவே போற்றத் தொடங்கி விட்டனர்.
சொல்லப் போனால், நகைச்சுவைக்கென்றே அரசியல் சம்பவங்களை உருவாக்கி, யாருடைய மனதும் புண்படாத வகையில் எழுதியவர் 'சோ' தான் முன்னணியில் இருப்பவர். இதைப்போல தேவனும் அந்தக் கால அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 'துக்ளக்' இதழில் சத்யா இது போன்ற கட்டுரைகளை இப்போது எழுதிக்கொண்டு வருகிறார்.
தேவன், சோ போன்றவர்களின் நகைச்சுவையில் இருக்கும் அழுத்தம், சத்யாவின் எழுத்தில் இருக்காது. இருந்தாலும், இன்றைய நகைச்சுவை எழுத்தாளர்களில் முன்னணியில் நிற்பவர்களுள் ஒருவர் சத்யா. அடுத்தது ஜே.எஸ். ராகவனைக் குறிப்பிடலாம்.
இவர் நகைச்சுவை கதைகள் மட்டுமே எழுதுபவர். இவரும் எஸ். வி. வி.யைப் போல ஆங்கிலத்திலும், தமிழிலும் தரமான நகைச்சுவையை தருவதில் வல்லவர். தமிழில் மிகவும் பிரபல்யமாகப் போற்றப்படும் நூல்களுள், தேவன் எழுதிய 'துப்பறியும் சாம்பு'வும் ஒன்று. இந்தத் தொடரை மிக மிக அழகாகப் படைத்துள்ளார் தேவன்.
தேவன் மறைந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும், அவர் படைத்த கதைகளும், கட்டுரைகளும் சிரஞ்சீவியாக வாழ்கின்றன. அந்த அளவுக்கு அவருடைய எழுத்து அமைந்ததுதான் ஆச்சரியம். தேவன் தன் சொந்த வாழ்க்கையில் பலவித எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்தவர். எப்போதும் அமைதியாக இருப்பார்.
அதிர்ந்து பேசக்கூடியவர் அல்ல. இப்படிப்பட்டவர் இவ்வளவு நகைச்சுவை கட்டுரைகளையும், கதைகளையும் அளித்தது, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒருவேளை இதுபோல எழுத, இந்த மாதிரி ஆசாமிகளால்தான் முடியுமா என்பதும் தெரியவில்லை.
ஆனால், 'சோ' அவர்களுடன் பேசும்போது கூட நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.
"எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், நான் தேவன் நூல்களை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருப்பேன்” என்று கிரேஸி மோகன் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம்.
எஸ். வி. வி., தேவன் நூல்களை மிகவும் போற்றி பாராட்டுபவர்களில் எழுத்தாளர் சுஜாதாவும் ஒருவர்.
'சோ'வுக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் தேவன். இவர்கள் எல்லாம் இன்று முன்னணி எழுத்தாளர்களாக இருந்தாலும், மனம் திறந்து தேவன் எழுத்துக்களை பாராட்டத் தயங்கியதில்லை. இப்படிப்பட்ட எழுத்துக்கள் நமக்குக் கிடைத்தது பற்றி நாம் பெருமை கொள்ள வேண்டும். பெருமை கொண்டால் மட்டும் போதுமா? நிறைய வாங்கிப் படிக்கவும் வேண்டும். நீங்கள் சுவைத்தது போல, உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் சுவைக்க முயலுங்கள். அதனால் அனைவரும் பயனடைவார்கள்.
Release date
Ebook: 5 February 2020
English
India